வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணமேற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக இறந்தவரது உறவினர்கள் தெரிவிக்கையில், ‘மகாறம்பைக்குளம், புளியடி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர், கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக நாய்கடிக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற அவர், நாய்கடித்ததற்கான தடுப்பூசியை இன்றுகாலை இட்டுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்தநிலையில், அவருக்கு திடீர் என்று சுகயீனம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்தனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது-49) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் தவறுதலான தடுப்பூசி ஏற்றப்பட்டமையாலேயே சம்பவித்ததாக மரணமடைந்தவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.