மன்னார் நகர சபையின் கீழ் உள்ள புதிய பஸ் தரிப்பிடத்தில், மன்னார் மாவட்ட தனியார் பஸ் சேவை மற்றும் இலங்கைப் போக்குவரத்து பஸ் சேவைகள் என்பன இணைந்த சேவையாக மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு, நேற்று மாலை தீர்வு எட்டப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில், நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.இதன்போது, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குச் சுமூகமான முறையில் ஒன்றிணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக போக்குவரத்து சேவையை மேற்கொள்ளமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இரண்டு வாரங்களுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகள், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, புதிய நேர அட்டவணையைத் தயாரித்து போக்குவரத்துச் சேவையை தொடர்ந்து மேற்கொள்வதென, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுவரையில் பழைய நேர அட்டவணைக்கு அமைவாக அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் ஒன்றிணைந்த சேவையாக முன்னெடுக்கப்படுமெனவும், தீர்மானிக்கப்பட்டது.