வவுனியா – ஓமந்தைப் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து விவசாயின் வீட்டுக்குள் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை சேதப்படுத்தியதுடன், வீடு பயன் தரும் மரங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக, வீட்டின் உரிமையாளாரால் அதிகாரிகளிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கரத்திமோட்டை ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராமத்துக்குள் நேற்று இரவு புகுந்த காட்டுயானை ஒன்று, வீட்டின் முன்பக்க சுவரை உடைத்து, அங்கு அடுக்கிவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளது. இதன்போது வீட்டில் நின்ற பயன்தரும் மரங்களையும் அடித்து நொருக்கிச் சென்றுவிட்டதாகவும் காட்டு யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்து தருமாறும், வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகத்தான் புதுக்குளத்துக்கு 18 கிலோமீற்றர் நீளமான பகுதிக்கு காட்டுயானை வேலி அமைத்துத்தருமாறு பல அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டும், இன்று வரையிலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.