வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவோ மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் தண்டப்பணம் விதிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கடந்த வாரம் முழுவதும் ஒத்திகை நடவடிக்கையாக இது இடம்பெற்றது. இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மீண்டும் பிற்பகல் நான்கு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ராஜகிரிய பகுதிக்குச் சென்ற மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னக்கோன் நிலைமையைப் அவதானித்தார். இதேவேளை, காலி மஹமோதர வைத்தியசாலைக்கு அருகிலிருந்து காலி நகர் வரையிலும், காலி – கொழும்பு வீதியிலும் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதேவேளை, மாத்தறை நுபே சந்தியிலிருந்து கொடகம அதிவேக வீதி நுழைவாயில் நோக்கியும், காலி நோக்கியும் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.