ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவி ஆயர்கள் மூவருக்கு இன்று கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சாட்சியாளர்களால் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களை நிராகரிக்கும் வகையில் அறிவித்தல்களை வெளியிட வேண்டாம் என இதன்போது ஆணைக்குழு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கடந்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் கருத்து வெளியிடப்பட்டு சில தினங்களின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியாகியது.

சாட்சியாளர்களிடம் சட்டத்தரணிகளால் குறுக்குக் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பை விடுக்க முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

ஆகவே, எதிர்காலத்தில் இவ்வாறான அறிவித்தல்களை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா மற்றும் 3 உதவி ஆயர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.