கிளிநொச்சி கோணாவில் கிழக்குப்பகுதியில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், போதிய குடிநீர் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அக்கிராமத்தில் காணப்படும் பொதுக்கிணறுகள் மற்றும் ஏனைய கிணறுகளில் நீர் வற்றிக்காணப்படுவதாலே தாம் நீர்ப்பற்றக்குறையை எதிர்கொள்வதாக அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை இப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட குழாய்கிணறுகளும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் இங்குள்ள மக்கள் தமக்கான குடிநீரையும், இதர தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக இங்கிருந்து தண்ணீரைப் பெறுவதற்கு மிக நீண்டதூரம் அயல் கிராமங்களுக்குச்செல்லவேண்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே பழுதடைந்த கிணறுகளை புனரமைத்துத் தருமாறும் தற்போது வழங்குகின்ற குடிநீரை அதிகரித்துத்தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஏனைய அரச அமைப்புக்களாலும் இந்தப்பிரதேசத்தின் தேவைகள் கருதி அமைக்கப்பட்ட கிணறுகள் அனைத்துமே நீர் இன்றி காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.