இலங்கையின் ஜனநாயகத்துக்கு சாவு மணியடிக்க தயாராக இருக்கும் அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி எதிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவு நிறைவேறினால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புக்கள் சிதைவடையும். நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரங்கள் குவியும். இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம். நாடாளுமன்றத்தில் எமது கடுமையான எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவோம். அதேவேளை, மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி 20வது திருத்தச் சட்ட வரைவை எதிர்க்க வேண்டும்.

20வது திருத்தச் சட்ட வரைவை எதிரணியினர் மட்டுமல்ல ஆளுந்தரப்பிலும் பலர் எதிர்க்கின்றார்கள். அவர்கள் சபையில் தயக்கமின்றி பகிரங்கமாகத் தமது கருத்துக்களை வெளியிட வேண்டும். அதுமட்டுமன்றி திருத்தச் சட்ட வரைவு வாக்கெடுப்புக்கு வந்தால் அதைத் துணிவுடன் எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.