பாராளுமன்றத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில், ஆளும் தரப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியர்கள் குழாம் பரிசீலிக்கின்றது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையாகும் போது முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 7 இடையீட்டு தரப்புகளும் முன்வந்துள்ளன. ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆவுஏஃஆடீஊ ஊடக வலையமைப்பும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. குழுநிலை சந்தர்ப்பத்தில் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளின் வாய்மூல சமர்ப்பணங்கள் ஆரம்பமாவதற்கு முன்னதாக சட்ட மா அதிபர் மன்றில் அறிவித்தார். குறித்த திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தையும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த ஆவணத்திற்கு அமைய, ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும் போது ஜனாதிபதி பாராளுமன்ற சபையின் கண்காணிப்புகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பதவிக்கு தகமைவாய்ந்த கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மீண்டும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற திருத்தமும் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்திற்கு மேலதிகமாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை நியமிக்கும் போதும் ஜனாதிபதி பாராளுமன்ற சபையின் கண்காணிப்புகளை அறிய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்துவதற்குமான திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது. பிரதமரின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தையும் ஜயாதிபதியின் கீழ் கொண்டு வருவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. உத்தேச திருத்தத்திற்கு அமைய பாராளுமன்றம் கூட்டப்பட்டு இரண்டரை வருடங்களின் பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது. எவ்வாறாயினும், பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்த ஆவணத்திற்கு எதிராகவே தாம் உயர் நீதிமன்றத்திற்கு வந்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்தார். நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணமே ஒழிய, குழுநிலை சந்தர்ப்பத்தில் திருத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் ஆவணத்தை அல்லவெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கு பூரணமான விடுபாட்டுரிமை கிடைப்பதன் மூலம் சட்டத்திற்கும் அப்பாற்பட்ட பதவியொன்று உருவாவதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். மக்கள் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு உள்ள அடிப்படை உரிமைக்கு இதன் மூலம் இடையூறு ஏற்படுவதால், அது அடிப்படை உரிமை மீறலாகும் எனவும் அவர்கள் வாதங்களை முன்வைத்தனர். ஆகவே, பூரணமான விடுபாட்டுரிமையை மீள வழங்குவது தொடர்பிலான சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாத்திரமல்லாது மக்கள் கருத்துக்கணிப்பின் ஊடாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என மனுதாரர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இதன்போது சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு அரசுகளுடன் சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர்களது சார்புத்தன்மை தொடர்பிலான முரண்பாடு மக்களின் இறைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த சரத்தும் மக்கள் கருத்து கணிப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்தனர். ஜனாதிபதியின் பொறுப்புகள் தொடர்பான முழுமையான சரத்தில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற பகுதி மாத்திரம் 20 ஆவது திருத்த சட்டமூலத்தின் வேறொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆகவே, குறித்த சரத்து குழுநிலை சந்தர்ப்பத்தில் நீக்கப்படுமா என்ற சந்தேகம் எழுவதாகுவம் அவர் குறிப்பிட்டார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அத்தகைய ஒன்று நிகழவில்லை என சட்டத்தரணிக்ள உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். 19 ஆவது திருத்தம் முழுமையான அரசியலமைப்பின் ஒரு பகுதி என்பதால், அது அனைத்து சரத்துகளுடனும் தொடர்புபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

20 ஆவது திருத்தமும் அரசியலமைப்பின் ஒரு பகுதியன்றி முழுமையான அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் இன்று உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.