ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் 45வது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று (30) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அவர் குறித்த அறிக்கையில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறித்த அறிக்கையில் குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்கு பின்பும் விசாரிக்கப்பட்டதாக அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவை தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி செயலாளர் நாயகம் இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம் குறித்த விடயங்களுக்கான பதிலை உடனடியாக வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.