காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறுசிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானது அல்ல. யுத்தகாலத்தின் போது காணாமல் போனவர்கள், மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் என கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். அது மட்டும் அல்லாது வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர்.

எனவே இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மையாக அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களின் விவகாரங்களை கையாள்வதற்கு காணாமல் போனவர்கள் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஊடாக நாம் தகவல்களை திரட்டி வருகிறோம். குறிப்பாக உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான அறிக்கைகள் ஒவ்வொரு தொகையை கூறுகின்றன.

எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் வேறுபாடுகள் இருப்பதால் ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்று மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே காணாமல் போனவர்கள் விவகாரத்தில் முதலில் தரவுகள் அடிப்படையில் உண்மையான அறிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் உதவித் தொகை வழங்குவது தொடர்பில் கடந்த அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தால் அது ஆராயப்படுமஎன்று குறிப்பிட்டுள்ளார்.