2020 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இதுவரையில் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் குறித்த நுழைவுச் சீட்டினை தமது அடையாள அட்டையின் இலக்கத்தினை பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.donets.lk க்கு பிரவேசித்து http://www.slexams.com/ ஊடாக பதிவிறக்கிக் கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனத் பூஜித்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இதற்கமைவாக இந்த காலப்பகுதிக்குள் ஏதேனும் அனர்த்தம் அல்லது பாதிப்பின் காரணமாக பரீட்சைக்கு தோற்றுவது தடை ஏற்படுமாயின் இந்த மத்திய நிலையத்தில் தொடர்புகொள்ள முடியும்.

இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் துரித தொலைபேசி இலக்கமான 117 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இக் காலப்பகுதியில் 24 மணித்தியாலமும் செயற்படும்.

பரீட்சைகள் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் இந்த தொலைபேசியூடாக அறிவிக்க முடியும்.