யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தப் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு, பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் நேற்று நண்பகல் கலைப்பீடச் சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம் நேற்றிரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய – காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.