வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று (14) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் கணவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த குடம்ப பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து, இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம சேவையாளர் சாந்தரூபன் சடலத்தினை அவதானித்துடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கினார்.

வவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.