மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 4 ஆம் திகதி கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து, இதுவரை 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம் இதுவரை தொற்றுடையவர்கள் அடையாளங்காணப்படவில்லை.

தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று நோயியல் பிரிவின் தரவுகளுக்கமைய, இன்று பிற்பகல் 4 மணி வரை நாட்டின் 24 இடங்களிலிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் பதிவான கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களாவர்.

நேற்று (13) பதிவான 42 நோயாளர்கள், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களாவர்.

மினுவாங்கொடை பகுதியில் 38 பேரும் கம்பஹாவில் 36 பேரும் திவுலப்பிட்டிய பகுதியில் 34 பேரும் கொரோனா தொற்றுடன் நேற்று அடையாளங்காணப்பட்டனர்.