முல்லைத்தீவு மாவட்டத்தில், ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, வடமாகாண ஊடகவியலாளர்களால், முல்லைத்தீவில், இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள்,  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று, அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, பொலிஸஸ் அத்தியட்சகரிடம் மகஜரொன்றும் மரக்கன்று ஒன்றும் கையளிக்கப்பட்டன.

தொடர்ந்து அங்கிருந்து மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்ற ஊடகவியலாளர்கள், மாவட்டச் செயலாளரின் பிரதிநிதி ஒருவரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை கையளிக்கப்பட்டதுடன், மரக்கன்று ஒன்றையும் வழங்கினர்.

அதையடுத்து, முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசி திணைக்கள அலுவலகத்துக்கு ஊடகவியலாளர்கள் பேரணியாகச் சென்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, கிளிநொச்சியிலும், இன்று (15) காலை 10 மணிக்கு, கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்ததது.