அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது விஞ்ஞானி அல்லது வணங்காமுடி என அழைக்கப்படும் தோழர்.செல்லத்துரை கலாமோகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பது நீங்கள் அறிந்ததே.கழகத்தின் (புளொட்) மாணவர் அமைப்பில் தளத்தில் செயல்பட்டவரும், கழகத்தின் சுவிஸ்கிளைத் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல் இலங்கை செல்லும் வரை கழக சுவிஸ் கிளையில் செயல்பட்டவருமான தோழர் கலாமோகனுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பில் அஞ்சலிக் கூட்டம் இன்றையதினம் 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் சூரிச்சில் பல்மேரா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளை பொறுப்பாளர் தோழர் ஆனந்தன் அஞ்சலிச் சுடரை ஏற்றிவைக்க, தோழர் கலாமோகனின் நெருங்கிய நண்பரும், தோழருமான தோழர் தயா ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தோழர் கலாமோகனின் மற்றுமோர் நண்பரான திரு.செல்வா அவர்களினால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இருநிமிட மௌனஞ்சலியைத் தொடர்ந்து மலரஞ்சலி, தோழர்களின் அஞ்சலிச்சுடர் ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தோழர் ரஞ்சன் அவர்களினால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட அஞ்சலி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் வரதன் அவர்களின் அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான தோழர் தீபன், தோழர் சிவா, தோழர் மனோ மற்றும் சூரிச் தமிழ் சங்கம் சார்பில் திரு.இரத்தினகுமார், தோழர்.கலாமோகனின் பள்ளித் தோழன் தோழர் ராஜேஷ் ஆகியோரின் உருக்கமான உரைகள் நடத்தப்பட்டது. மேற்படித் தோழர்களின் உரையினால் கலந்து கொண்டவர்கள் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எனப் பலரும் இன்றைய நெருக்கடியான காலத்திலும் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.