வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று  (04) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராஜா லக்சன் (வயது -18) என்ற நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட போத்தல் உள்ளிட்ட கழிவுகளை நண்பர்களுடன் இணைந்து அகற்றிய மாணவன், அதற்குள் குதித்த போது சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.