மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.தேர்தலை நடத்துவதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பின் போது மாகாண சபை தேர்தல்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

விஜேராமையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பழைய அல்லது புதிய முறைக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பழைய முறைக்கு அமைய இம்முறை மாகாண சபைத் தேர்தலை நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையில் தேர்தலை நடத்துவது எளிதாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.

பிரதமருடனான இன்றைய சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட உறுப்பினர்களும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டிருந்தனர்.