பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  இன்று (2020.12.22) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது

கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பல நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு இத்தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உறுதியளிக்க முடியும் என பிரதமருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

‘இந்த சவால் மிகுந்த காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு மிகுந்த கடப்பாட்டுடன் காணப்படுவதாக ஹனா சிங்கர்   குறிப்பிட்டார்.

பெருந்தொகையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும்போது அவற்றை கிடைத்தவுடன் பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கு இலங்கையின் அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அரச பிரதிநிதிகள்  இடையே இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

‘பல நாடுகளில் கொவிட்-19 இன் ஆபத்தான இரண்டாவது அலை நிலவிவருகிறது’ என சுட்டிக்காட்டிய   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  தொற்றை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே எனவும் தெரிவித்தார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 நோயறிதலுக்கான அணுகலை விரைவுபடுத்துவதற்காக “ACT-Accelerator” எனும் பெயரில் உலகளாவிய கூட்டாட்சியொன்று உருவாக்கப்பட்டது.

COVAX வசதியின் கீழ் கொவிட்-19 நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி தயாரிப்பிற்கேற்ப தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் அணுகுமுறையை துரிதப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த நாடுகளின் மக்கள்தொகையில் குறைந்தது 20 வீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்படும். ஆரம்பத்தில், ஆபத்து மிகுந்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் நவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மற்றும் பொதுமக்களை அது தொடர்பில் தெளிவுபடுத்துதல் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய டிம் சுடன் அவர்கள், முதல் கட்ட தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்கனவே ஆதரவு வழங்கியிருப்பதுடன்,  20 வீதம் என்ற இலக்கை விட அதிகமான தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர், பிரதமரிடம் கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசி குறித்து விளக்கமளித்த வைத்தியர் பெண்டிசே அவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சமூகமயப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘அது ஒரு புதிய தடுப்பூசி’ எனக் குறிப்பிட்ட வைத்தியயர் பெண்டிசே, ‘அது மக்கள் உயிரிழப்பதிலிருந்து பாதுகாக்கும்.  எனினும், அது பரவலை எந்தளவிற்கு கட்டுப்படுத்தும் என்பது தொடர்பில் கூறிமுடியாது’ எனத் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டு கொண்டதன் பின்னரும் இத்தொற்று குறித்து எவரும் அலட்சியமாக செயற்பட முடியாது என்பது இந்த விசேட கலந்துரையாடலின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வு தொடர்ச்சியாக செயற்படுத்தப்படுவதுடன், தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்பது தொடர்பில் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்றும் வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதற்கமைய தடுப்பூசி ஊடாக உடலிலுள்ள வைரஸ் முற்றாக அழிக்கப்படுமா அல்லது வைரஸின் தாக்கம் குறைக்கப்படுமா என்பதும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

தாக்கத்தை குறைக்கும் செயற்பாடு மாத்திரம் இடம்பெறுமாயின் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரொருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் வாய்ப்புள்ளது.தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணல் ஆகியவை குறித்து மக்கள் கவனத்தில் கொண்டு செயற்படல் வேண்டும்.

குறித்த சந்தர்ப்பத்தில்  அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி,  இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.