முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக 200 மீற்றர் தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.

குளத்தினை பாதுகாப்பதற்காக தற்காலிகமாக மண்மூடைகள் போடப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கும் வேலைத்திட்டம் நீர்ப்பாசன திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குளக்கட்டிற்கு முழுமையாக அலைக்கல்லு போடாததன் காரணமாகவே இவ் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் தற்போது 20.3 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையிலையே இவ் அரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் குளங்களுள் தண்ணிமுறிப்பு குளம் நான்காவது பெரிய குளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.