திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

நேற்று (22) மாலை வரை முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என எனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை, ஜமாலியாவில் நான்கு மாணவர் உட்பட 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, திருகோணமலை நகர சபை தீயணைப்பு படைவீரர்கள் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருகோணமலை நகரில் வசித்து வரும் தீயணைப்பு படை வீரர் ஒருவரின் தாய்,  தந்தைக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், மூதூரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  49 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.