திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவளிபுரம்-சஹாயமாதா வீதியில் வசித்துவரும் ரவீந்திர குமார் ஜேனுஷன் (16 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவளிபுரம் பிரதேசத்திலுள்ள (பாம்குளம்) என்று அழைக்கப்படும் குளத்துக்கு வழமைபோன்று நண்பர்களுடன் பொழுதுபோக்கை கழிக்கச் சென்றவர்களை நண்பர்கள் மூன்று பேரும் குளித்ததாகவும், சக நண்பர் ஒருவருடைய செருப்பை குளத்துக்குள் விளையாட்டுக்காக வீசியபோது அதனை எடுத்துச் சென்றவர் நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து குறித்த இளைஞன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.