கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளைப் பெறுவதற்காக  ரஷ்யா மற்றும் சீனாவுடன் இலங்கை, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க இன்று (27) தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி தடுப்பூசிகள் நாளை (28) காலை 11 மணிக்கு இலங்கைக்கு வரும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் 250,000 பேருக்கு 500,000 தடுப்பூசிகளை இந்தியா வழங்குகின்றது.

இதேவேளை, இலங்கைக்கு தடுப்பூசிகளை வழங்க சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்த லலித் வீரதுங்க தடுப்பூசிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரஷ்யாவிடம் தடுப்பூசிகளைக் கோரியுள்ளார் என்று வீரதுங்க கூறியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க ரஷ்யா இணங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.