பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (02) விஜேராம இல்லத்தில் சந்தித்தனர்.

சந்திப்பை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறமை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், பங்காளதேஷ் பிரதமரின் வாழ்த்து செய்தியை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றையும் அவர் பிரதமரிடம் கையளித்தார்.

வேளாண்மை, மீன்பிடி மற்றும் கப்பல் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பு மூலம் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு குறித்து உயர் ஸ்தானிகர் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், பங்களாதேசம் நன்னீர் மீன் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளதாகவும் அதன் சிறந்த நடைமுறைகளை இலங்கையுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய காலநிலைகளுக்கு ஏற்ற வகையிலான உயர்தர அரிசியை உற்பத்தி செய்வதற்கும் அதன் மூலம் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பங்களாதேசம் இதுவரை இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது.

கல்வி மற்றும் ஒளடத துறைகளுக்கு பங்காளதேஷ் இதுவரை அளித்த ஆதரவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இலங்கையில் ஒளடத உற்பத்தி துறையில் பங்காளதேஷ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உயர் ஸ்தானிகருக்கு அழைப்புவிடுத்தார்.

இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமரும் உயர் ஸ்தானிகரும் கலந்துரையாடினர்.

பங்காளதேஷ் இந்த ஆண்டு ஐம்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அதனை முன்னிட்டு பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமருக்கு உயர் ஸ்தானிகர் அழைப்புவிடுத்தார்.

இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள நட்பை மேம்படுத்த பங்காளதேஷ் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைசெய்வதற்கு உயர்ஸ்தானிகருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்து கொண்டார்.