ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா – பூந்தோட்டம், சிறிநகர் கிராம மக்களால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று, இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.

20 வருடங்களாகியும் தமது கிராமத்துக்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அப்பகுதி மக்கள், பல வருடங்கள் ஆகியும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லையெனவும்  இது தொடர்பாக எவரும் கரிசனை கொள்ளவில்லையெனவும் சாடினர்.

உட்கட்டுமானம் சீரின்மையால் மழைக் காலங்களில் வீடுகளில் நீர்தேங்கி நிற்கிறது எனத் தெரிவித்த அப்பகுதி மக்கள், காணி உரிமைப் பத்திரம் வழங்கினால் அதனை வங்கிகளில் வைத்து கடன் பெற்றாவது வீடுகளை கட்டிக்கொள்ள முடியுமெனவும் ஆனால், அதுவும் வழங்கப்படவில்லை எனவும் கூறினர்.

அத்துடன், கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ள புனர்வாழ்வு இணைப்புகாரியாலம் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் தமது கிராமத்துக்குள்ளேயே வருவதாகவும் அவர்கள் சாடினர்.

“எனவே, எமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தொடர்போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” எனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேச செயலாளர் ந.கமலதாசன் பிரதேச சபை தவிசாளர் து.நடராயசிங்கம், முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

அத்துடன், ஏனைய காணிகள் குளத்தின் கீழ் வருவதால், அதனை உரிய திணைக்களம் விடுவித்து தந்தால், அதற்கான உறுதிகளையும் வழங்கமுடியும் என்றும் கூறினர்.

இதேவேளை, போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு வருகை தந்த நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்  “கிராமத்தின் குளத்தின் நீரேந்து பகுதியில், 55 பேரது காணிகள் அமைந்துள்ளன. அதனை விடுவிப்பது தொடர்பாக எமது தலைமை அலுவலகமே தீர்மானிக்கும். எனவே, நீங்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் மேலதிக நடவடிக்கைகளுக்காக அதனை எமது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க முடியும்” எனத் தெரிவித்தனர்.

எனினும், குறித்த மக்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.