கிழக்கில் மாகாணத்தில் கொரோனாத் தொற்று தற்போது வெகு வேகமாக பொது இடங்களில் பரவிவருவதால் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன், இன்று (15) அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்று மரணங்கள் 18ஆக அதிகரித்துள்ளதாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் பிரிவில் 10 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 2,727ஆக அதிகரித்துள்ளதால் 07 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் வாழும் மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும், தெஹியத்தக்கண்டி, அம்பாறை, தமண, கல்முனை தெற்கு, சம்மாந்துறை, உப்புவெளி, திருகோணமலை ஆகிய 07 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தொடர்ந்து கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,322 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 236 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 638  பேரும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 531 பேருமாக மொத்தம் 2,727  பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரொனாத் தொற்று எம்மை விட்டு அகலவில்லையெனவும் தொடந்தும் சமூக இடைவெளியைப் பேணுவதுடன், முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாட வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார்.