சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக இன்று (24) காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.இவர்களை விட அனுபவமான பலர் பல வருடங்களாக வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதேவேளை சுகாதார பணி உதவியாளர்களாக பணிபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை.

தற்போது நியமிக்கப்படவுள்ளவர்களிற்கு அடிப்படை சம்பளம் எங்களை விட அதிகமாக உள்ளது. எனவே இது ஆட்சேர்ப்பு விதிமுறைகளிற்கு எதிரான ஒரு செயற்பாடகவே நாம் பார்க்கின்றோம். எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் ஊழியர்கள் சுகாதார துறைக்கு தேவையில்லை. அல்லது அதனை நீதியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே! எமதுஉரிமையை எமக்கு வழங்கு! முறையற்ற நியமனம் வே!! மனஅமைதியுடன் பணி செய்ய விடு, கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே போன்றவாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இவர்களது பணிபுறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.