வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (03) காலை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற இராணுவத்தினர் மறித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சேமமடு பகுதியை சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரம் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

ஓமந்தை பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.