திருகோணமலை நகரின் என்.சி.வீதி, மத்திய வீதி, மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பிரதேசங்களில் இம்மாதம் 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள், இன்று (17) அதிகாலை வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில், 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நகர பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேருக்கும் திருகோணமலையைச் சேர்ந்த 11 பேருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி மூடப்பட்டிருந்த கடைகள் இன்று திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும், வைரஸ் தொற்று உறுதியான தொற்றாளர்கள் அனைவரையும் கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.