யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வசதியாக தேவையற்ற வருகைகளைத் தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படுமென பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இருவர், தாதியர்கள் மூவர் உள்பட நி்ந்தர பணியாளர்கள் 9 பேரும் மருத்துவ பீட மாணவர்கள் இருவர் தாதிய மாணவர் ஒருவரும் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவரும் என 13 பேருக்கு நேற்று (26) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உயர்மட்டக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

 “வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் சுமுகமாக முன்னெடுக்கப்படுமெனவும், கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நோயாளர்களை பார்வையிட வருவோர் தவிர்க்கவேண்டும். போதனா வைத்தியசாலைக்குள் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் வைத்தியர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.