திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28)  மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலாமாக  மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம்  லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திகுளம் குளத்தில் இரண்டு சிறுவர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அச்சிறுவனுடன் சென்ற சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தகவலைக் கூறியதையடுத்து, அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை, தன்னுடைய மகனை முதலை  இழுத்துச் செல்வதை அவதானித்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முதல் காணாமல்போயிருந்த இச்சிறுவன், முதலை கடித்த நிலையில் கிராம மக்களின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் தொடர்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.