இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு கண்ணாடி இழை படகு மூலம்   இலங்கையைச் சேர்ந்த இருவர் சட்ட விரோதமான முறையில் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள், மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஸ் என தெரிய வந்தது.

இவர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறிய தங்களை தமிழகத்திற்கு வரவழைத்தாக  விசாரனைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் பொலிஸார், அவ்விருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்கு சட்ட விரோதமாக நுழைந்த மன்னாரை சேர்ந்த  குறித்த இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.