இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான  சேவையொன்றினை விரைவில் தொடங்கவுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன  ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “எதிர்வரும் மே-செப்டம்பர் மாதங்களில் 2000 முதல் 5000 வரை இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரு நாடுகளுக்கிடையிலும் நேரடி விமானச் சேவை நடவடிக்கைகளைத்  தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் தற்போது கொரோனாத் தொற்றின் பாதிப்பிலிருந்து நாடு மீண்டுவருவதால்  சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவது குறித்து தூதரகங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் ரஷ்யாவிலிருந்து ஏரோஃப்ளொட், ஷார்ஜா- ஏர் அரேபியா, துபாய்- ஃப்ளைடுபாய், இந்தியா- விஸ்டாரா விமான நிறுவனங்கள் மற்றும் குவைத்- ஜசீரா ஆகிய விமான நிறுவனங்கள் மூலம் இலங்கைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.