நடைபெற்று முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்தஇதனை தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான திகதிகளை மாற்றுவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதேவேளை, சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளின் அதிபரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக அந்தந்த பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் அரசாங்கத்தினால் கடந்த 23ஆம் திகதி சுகாதார வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டது.

இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேநேரம், பல்கலைகழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் என்பன மூடப்படுவதுடன், மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.