கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை 1,193 பேருக்கு கொரொனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரு அலைகளின் போதிருந்த மாவட்ட தொற்றுநிலை தலைகீழாக மாறி, திருகோணமலை அதிகூடிய தொற்றையும் அதி குறைந்த தொற்றை கல்முனைப் பிராந்தியமும் கொண்டுள்ளது. கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23 பேரும் இரண்டாவது அலையில் 3,645 பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 628 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 402 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 142 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 21 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கிழக்கில் மூன்றாவது அலையில் இதுவரை 09 பேர் மரணித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளியில் மூவரும் திருகோணமலையில் மூவரும் மூதூரில் இருவரும் அம்பாறையில் உகனயில் ஒருவருமாக இம்மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, நேற்றுக் காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 95 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் 8 கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் தற்போது 736 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.