கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இவ்வாண்டு அமுல்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் சாதாரண தர பரீட்சையையும், டிசம்பரில் உயர்தர பரீட்சையும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் இந்த மாற்றம் 2022 ஆண்டு அல்லது 2023 ஆம் ஆண்டே அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டத்தை ஒரு வருடமும் 09 மாதங்களுக்கு மட்டுப்படுத்தி மறுசீரமைக்க கல்வி அமைச்சர் முன்மொழிந்த யோசனைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எடுக்கும் காலத்தை குறைப்பதன் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் முதல் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.