நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வு இம்மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் கடிதமொன்று மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்

குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் C.V.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N. ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயகத்தின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்துடன் விரிவான அறிக்கையொன்றும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 46/1 பிரேரணையின் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.

காணி அபகரிப்பு, தொல்லியல் நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள், தடுத்து வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள், அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரகால சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாய நிலைகள் உள்ளிட்ட விடயங்களும் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுரேந்திரன் குருசுவாமியின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது