முன்னெடுக்கப்படும் தேர்தல் மறுசீரமைப்புக்கு அமைய எதிர்வரும் தேர்தல்களை
கலப்பு முறையின் கீழ் முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ள விசேட பாராளுமன்ற
குழு, இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி சபைகள், மாகாண
சபைகள் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை
மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் இணங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்புத் தொடர்பில்
முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு
வழங்கப்பட்டிருந்த காலக்கெடு ஜூலை 15ஆம் திகதி வரையும் இக்குழுவினால்,
நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான
சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப்
பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு, பாராளுமன்றத்தில் நேற்று
(21) கூடியது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது .

இதற்கமைய குறித்த தினத்துக்கு முன்னர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு
அக்குழுவின் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அரசியல்
கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

முன்மொழிவுகளை sec.pscelectionreforms2021@parliament.lk என்ற மின்னஞ்சல்
முகவரியின் ஊடாக அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப்
பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க
முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

“தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளை மறுசீரமைப்பது தொடர்பான
பாராளுமன்ற விசேட குழுவுக்கு இதுவரை கிடைத்துள்ள முன்மொழிவுகளின் எண்ணிக்கை 94
ஆகும்” என இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும்,
பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, இக்குழுக் கூட்டத்தில்
சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
பவித்திரா வன்னியாராச்சி, அலி சப்ரி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர
திஸாநாயக, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர
விதாரன மற்றும் சாஹர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்மொழிவுகளை வழங்குபவர்களிடமிருந்து வாய்மொழிமூல சான்றுகளைப்
பெற்றுக்கொள்ள குழு விரும்பினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நேரத்தில் குழுவின் முன்
ஆஜராகுமாறு அழைக்கப்படுவர் என்றும் இக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான
சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதும், தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகுமென பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.