உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் 23ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக International Widows’ Day அறிவித்து, 2010ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரை துடைக்கும் வகையிலும் சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் ஐ.நா பொதுச்சபைக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.

சர்வதேச விதவை தினத்தை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா. சபையில் பல தடவை பேசியுள்ளனர். காபூல் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வியா போங்கோ ஒனடிம்பாவின் கோரிக்கைப்படி, ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 23 ம் திகதியினை சர்வதேச விதவைகள் தினமாக அறிவித்து வருடந்தோறும் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைகள் சந்தித்துவரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து தீர்வுக்கு வழி வகுத்து வருகிறது.

உலகம் முழுக்க சுமார் 245 கோடி கைம்பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 11.5கோடி பேர் மிகவும் ஏழ்மையில் வசித்து வருகிறார்கள். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஆண் இறக்கும் நிலையில், சமூக நீதி அடிப்படையில் விதவை பெண்களுக்கு அரசு வேலை அளிப்பது அவசியமாகிறது. அப்போதுதான் நாட்டில் வறுமையில் வாடும் கைம்பெண்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

அதே நேரத்தில் நிறுவனங்களும், தனிநபர்களும் குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் கைம்பெண்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்வது அவசியம். குறிப்பாக, அவர்களின் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலைக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்…!

பொருளாதார ரீதியில் கைம்பெண்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மன ரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வது, குடும்ப பெண்களை விட விதவை பெண்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது. இது காலம் கொடுத்த வல்லமை என்றே சொல்ல வேண்டும்…!

இலங்கையிலே போரால் 90 ஆயிரம் பேர் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதாக மகளிர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கிழக்கில் சுமார் 49 ஆயிரம் பெண்கள்விதவைகளாக்கப்பட்டுள்ளதுடன் வடக்கில் சுமார் 40ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட இந்தப் பெண்களில் 12 ஆயிரம் பேர் 40 வயதை அண்மித்தவர்கள் என்பதும் 8000 பேருக்கு மூன்று வயது பிள்ளைகள் இருப்பதும் அரசின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் அதேவேளை பெரும்பான்மையான விதவைகள் தமிழ் மக்களாக இருப்பதைக் காட்டும் புள்ளிவிபரங்கள் சில செய்திகளை அழுத்தமாக எடுத்துரைக்கின்றன.