சிறைச்சாலை கைதிகள்  72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (05) உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், இன்று (06)  தெரிவித்தார்.

கொரோனாவினால்  மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைக் கைதிகள் 72 பேருக்கும், பொலிஸார்  இருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி , காத்தான்குடி ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூன்று பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்று நேற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 116 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.