தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரியும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்களும்  பரிசோதகர்களும், இன்று (19) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை இடம் பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், 2020ஆம் ஆண்டு செப்டெம்பர், நவம்பர் மற்றும் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை மட்டுப்படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கி இருந்தார்கள் என்றனர்.

60 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் மேற்கொண்ட நேரங்களுக்கான கொடுப்பனவை இது வரை காலமும் வழங்கவில்லை என ,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

‘குறித்த விடயம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற்சங்க அடிப்படையிலும் பணியாளர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலையில் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

‘கடந்த 2ஆம் திகதியன்று, குறித்த விடயம் தொடர்பில் கடிதமொன்றை பணிப்பாளருக்கு அனுப்பி இருந்தோம். கடந்த 9ஆம் திகதிக்கு முன் சரியான முடிவை வழங்குமாறும், அவ்வாறு சரியான முடிவு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தோம்.

‘மன்னார் மாவட்டத்தை தவிர வடக்கில் உள்ள ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கான மேலதி நேர கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படுகின்றது.

‘எனவே தமக்கு சரியான தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் போராட்டம் தொடரும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.