கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில், இன்று (05) பேரணி நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை  முன்னெடுத்தன.

மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கு அருகிலிருந்து அரசடி சந்தி வரை முதல் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் வரையில் கண்டன இப்பேரணி சென்றது.

“கல்வியை இராணுவ மயப்படுத்தும் கொத்தலாவ சட்டத்தை முறியடிப்போம்”, ‘கொத்தலாவ பாதுகாப்புச் சட்ட மூலத்தை அமுல்படுத்தாதே”, “கல்வியை இராணுவ மயப்படுத்தாதே”, போன்ற கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சர்வமத ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.