இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (9 ) மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இன்று மதியம் வருகை தந்த அவர் சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம் , ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம், யாழ். மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றை பார்வையிட்டார்.

நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்தது.

இதன் போது யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் எம்.பியுமான அங்கஜன் இராமநாதன், எம்.பி.சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் , யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன், யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலை மகள் விளையாட்டு மைதானம், பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண – கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும் பார்வையிடவுள்ளார்.