முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், 16ஆம் திகதியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இவரை 17ஆம் திகதியன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொறுப்பெடுத்து, அவரது வீட்டில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

தன்னை விடுதலை செய்து, குடும்பத்துடன் இணைந்தமைக்கு ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு, நடேசு குகநாதன நன்றிகளை தெரிவித்துள்ளார்.

‘இன்னும் 55 தமிழ் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் சுமார் 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்க மேலாக சிறையில் இருக்கின்றார்கள். என்னை போன்று அவர்களையும் விடுதலை செய்து அவர்களி;ன் குடும்பங்களுடன் இணைந்து வாழ வேண்டும். ஜனாதிபதி இதனை செய்துகொடுப்பார் என்ற நம்பிக்கை அரசியல் கைதிகளிடம் இருக்கின்றது.

‘மிக விரைவில் அவர்களும் விடுதலையாகி குடும்பத்துடன் இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.