தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதியன்று நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனை நினைவுகூரும் நிகழ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவும் கோவிட்-19 பரவல் காரணமாக நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது. எனவே, திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, பொலிஸாரால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான தடை உத்தரவையும் பிறப்பித்தது.

எனினும் தடைக் கட்டளையில் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.