கொவிட் 19′ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படுத்துவதில் அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ தயாரித்த ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், கொவிட் 19 நோயாளிகளை குணப்படுத்த பல மருந்துகளை இதுவரை உருவாக்கியுள்ளன.

இருப்பினும், அந்த மருந்துகள், கொரோனா தொற்றுக்குள்ளான தீவிர நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ மேற்பார்வையின் கீழ் வைத்தியசாலையில் வைத்து மட்டுமே வழங்கப்படுகின்றன.

எனினும், ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை அவ்வளவு ஆபத்தானது அல்ல என்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி வீட்டிலேயே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் மருந்தைப் பயன்படுத்த அனுமதி கோரி மெர்க் நிறுவனம் அனைத்து தரவுகளையும்  சமர்ப்பித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மோல்னுபிரேவிர் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது