நிரந்தர நியமனம் கோரி, வடமாகாண சுகாதார ஊழியர்களால், வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், இன்று (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களுக்கு மூன்று தடவைகள் நேர்முகப்பரீட்சை வைத்திருந்தார்கள் எனவும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றும் தங்களை பணிக்கு அமர்த்தாதது மிகவும் வேதனையான ஒன்று எனவும் கூறினர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்துக்கு தாங்கள் வேலைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர்கள், இல்லையென்றால், தாங்கள் தொடர்ச்சியாக சமூக மத அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராக உள்ளோம் எனவும் கூறினர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு பணிக்கு அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோர் எந்தவித கரிசனையுமின்றி தங்களைக் கண்டும் காணாமல் உள்ளார்கள் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சாடினர்.