கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென தமிழக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில், மீன் பிடிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என கோரி இராமேஷ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நஷ்டஈட்டை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை வசமுள்ள கச்சத்தீவை இந்திய மீனவர்களின் நலன் கருதி மீளவும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடலில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்குமாறு கோரி நேற்று (17) கடல் வழி கண்டனப் போராட்ட​ம் நடத்தப்பட்டது.

நேற்று காலை முல்லைத்தீவில் ஆரம்பமான இந்த போராட்டம் யாழ். பருத்தித்துறையில் நிறைவுபெற்றது.