கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட  மேலும் 316 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்ற  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 முகமாலை பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வெடிபொருள்கள் அகற்றப்பட்ட பகுதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், வாழ்வாதர பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணியை பொதுமக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக, பிரதமர் சார்பாக, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட ஆலோசனை அலுவலர் லியனகே, அமைச்சின் பணிப்பாளர் பிறேமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படவிருக்கும் பிரதேசத்துக்கு நேரில்  சென்று பார்வையிட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்தக் காணிகளை பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடு தொடர்பாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடினர்.