உலகிலேயே அதியுயர் தொழில்நுட்பம் வாய்ந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் அறிமுகப்படுத்தத் தயார் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலகைக் கையாள்வதில் இலங்கை நவீனமயமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றையதினம் (25) இடம்பெற்ற ‘லங்கா கியூஆர் வலையமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் பணம் அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது இவை அனைத்துக்கும் முன்னர், பணத்தை பயன்படுத்தாத பொருளாதாரத்தை நோக்கி செல்ல தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எந்த வசதிகள் இருந்தாலும், நாட்டு மக்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை எனின் முயற்சிகள் பலனளிக்காது என்றார்.

‘LankaQR’ டிஜிட்டல் தொழில்நுட்பமானது ‘QR’ குறியீட்டு முறையைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.